செய்திகள்
மத்தூர் அருகே பெண்ணை கட்டையால் தாக்கிய வாலிபர் கைது
மத்தூர் அருகே நாய் ஆட்டை கடித்த தகராறில் பெண்ணை கட்டையால் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மத்தூர் ஜோகிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா (வயது 50).
அதே பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன் (30), சக்திவேல்(30). ஜெயாவின் உறவினர்களான இவர்கள் 2 பேரும் பக்கத்து வீடுகளில் வசித்து வருகின்றனர்.ஜெயா செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அந்த நாய் நரசிம்மன் வளர்த்த ஆட்டை நேற்று கடித்தது. இதுகுறித்து நரசிம்மன் ஜெயாவிடம் சென்று ஏன் நாயை வீட்டினுள்ளே கட்டிபோட்டு வைக்க வேண்டியதானே என்று தட்டிகேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த நரசிம்மன் உறவினர் சக்திவேலும் அவருடன் சேர்ந்து கொண்டு ஜெயாவிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த 2 பேரும் ஜெயாவை ஆபாசமாக திட்டி கட்டையை எடுத்து தாக்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம்குறித்து ஜெயா ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் வழக்குபதிவு செய்து நரசிம்மனை கைது செய்தார். தலைமறைவாக உள்ள சக்திவேலை போலீசார் தேடி வருகின்றனர்.