உள்ளூர் செய்திகள்
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
வருகிற 20ம்தேதி அதிகாலை 4 மணிக்கு மாவிளக்கு நடக்கிறது. அன்று பிற்பகல் 3மணிக்கு மாரியம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது.
உடுமலை:
உடுமலையில் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 5ந் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த 12ந்தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு வாஸ்து சாந்தி, கிராம சாந்தி நிகழ்ச்சி நடந்தது.
தேவாங்கர் சமூகத்தின் சார்பில் நேற்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக பூமாலை சாலையில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அங்கிருந்து மேளதாளம் வாத்தியத்துடன், கொடி தளி சாலை, வடக்கு குட்டை வீதி, பெரியகடை வீதி வழியாக ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத் தொடர்ந்து கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், செயல் அலுவலர் வெ.பி.சீனிவாசன், உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் நீண்ட வரிசையில் நின்று சென்று மாரியம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் வருகிற 20ம்தேதி அதிகாலை 4 மணிக்கு மாவிளக்கு நடக்கிறது. அன்று பிற்பகல் 3 மணிக்கு மாரியம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. 21ந் தேதி காலை 6.45 மணிக்கு மாரியம்மன் சுவாமியுடன் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சிநடக்கிறது.
மாலை4.15மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இந்த தேரோட்டத்திற்காக தேரை அலங்கரிக்கும் பணிகளை தொடங்குவதற்காக நேற்று தேரில் ஆரக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த ஆரக்காலுக்கு, கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு தேருக்கு கொண்டு வரப்பட்டது.அந்த ஆரக்கால்தேரில் நடப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.