செய்திகள்
ஆந்திராவில் போதைக்காக கிருமிநாசினி திரவம் குடித்து மீண்டும் 3 பேர் பலி
ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் போதைக்காக கிருமிநாசினி திரவம் குடித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமராவதி:
கொரோனா ஊரடங்கு காரணமாக ஆந்திராவில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால், நாட்டு மதுவகைகள் மற்றும் கள்ளச்சாராயம் போன்றவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த போலி மதுபானங்களின் பட்டியலில், தற்போது கொரோனா பரவலை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் கிருமிநாசினி (சானிடைசர்) திரவமும் இணைந்துள்ளது.
அதில் இருக்கும் ஆல்கஹாலுக்காக இதை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கிருமிநாசினி திரவத்துடன் தண்ணீர் மற்றும் குளிர் பானங்களை சேர்த்து குடித்து போதை ஏற்றி வருகின்றனர். ஆந்திராவின் பல மாவட்டங்களில் இந்த பழக்கம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன் பிரகாசம் மாவட்டத்தில் போதைக்காக கிருமிநாசினி திரவத்தை குடித்து 19 பேர் பலியானது நினைவிருக்கலாம்.
கிருமி நாசினி திரவம் குடித்து மீண்டும் 3 பேர் பலியான சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.