உள்ளூர் செய்திகள்
நாங்குநேரியில் ஓட்டல் சூறையாடல்-2 பேர் கைது
நாங்குநேரி அருகே வாகைக்குளம் நான்கு வழிச்சாலையில் தொழில்நுட்ப பூங்கா அருகே உள்ள ஓட்டலை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர். இதுதொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
நெல்லை:
நாங்குநேரி அருகே வாகைக்குளம் நான்கு வழிச்சாலையில் தொழில்நுட்ப பூங்கா அருகே வள்ளியூரை சேர்ந்த அந்தோணி அல்போன்ஸ் விஜய்(வயது 45) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவரது ஓட்டலுக்கு மதுபோதையில் 3 பேர் சாப்பிட வந்தனர். தங்களது நண்பர்களையும் சாப்பிட வருமாறு செல்போனில் அழைத்தனர்.
தொடர்ந்து அங்கு வந்த 10 பேரும் சாப்பிட்டனர். அப்போது முதலில் சாப்பிட்ட 3 பேரும் சாப்பாட்டுக்கு பணம் கொடுக்காமல் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அந்த கும்பல் ஓட்டலை அடித்து நொறுக்கியது. கண்ணாடிகள், மேஜை, நாற்காலிகளையும் சூறையாடிவிட்டு தப்பி சென்றது.
உடனே விஜய் நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதுதொடர்பாக நாங்குநேரி அருகே உள்ள சென்னிமலையை சேர்ந்த அருணாசலம்(29), ராஜா(35) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.