செய்திகள்
கோப்புப்படம்

தடுப்பூசிகளை கொண்டு செல்ல டிரோன்களை பயன்படுத்த மத்திய அரசு அழைப்பு

Published On 2021-06-14 22:41 GMT   |   Update On 2021-06-14 22:41 GMT
தடுப்பூசிகளை டிரோன்கள் மூலம் கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறு ஆய்வை கான்பூர் ஐ.ஐ.டி.யுடன் இணைந்து இந்திய மருத்துவ ஆய்வுக்கவுன்சில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
புதுடெல்லி:

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகளில் மத்திய-மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இந்த தடு்ப்பூசிகள் அனைத்து பிரிவினரையும் சென்றடைய வேண்டும் என்பதில் அரசுகள் கவனமாக இருக்கின்றன.

குறிப்பாக தொலைதூர பகுதிகள் மற்றும் செல்வதற்கு கடினமான பகுதிகளிலும் தடுப்பூசியை கொண்டு சேர்க்க மத்திய அரசு முனைந்து வருகிறது. இதற்காக நாட்டின் கடைசி மைல் தொலைவையும் திட்டத்துக்குள் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த பகுதிகளுக்கு தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை கொண்டு சேர்க்க ஆளில்லா குட்டி விமானங்களை (டிரோன்கள்) பயன்படுத்த முயற்சிக்குமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை டிரோன்கள் மூலம் கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறு ஆய்வை கான்பூர் ஐ.ஐ.டி.யுடன் இணைந்து இந்திய மருத்துவ ஆய்வுக்கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

அதன் முதற்கட்ட முடிவுகளின் அடிப்படையில் டிரோன்கள் மூலம் தடுப்பூசிகளை கொண்டு சேர்ப்பதற்கான நிலையான நெறிமுறை ஒன்றை வகுத்துள்ளது. அத்துடன் இந்த பணிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டு உள்ளது.



கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு அப்பால் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் டிரோன் மூலம் தடுப்பூசியை வினியோகிக்கவும், மீண்டும் அதே இடத்துக்கு டிரோனை கொண்டு சேர்க்கவும் முடிந்த ஆபரேட்டர்களிடம் டெண்டர் தொடர்பாக ஐ.சி.எம்.ஆர். பேச்சுவார்த்தை நடத்தும்.

குறிப்பாக, 4 கிலோ எடையுடன் செங்குத்தாக மேலெழும்பி, வான் வழியாக 35 கி.மீ. தொலைவு வரை சென்று வரும் திறன்பெற்றதாக டிரோன்கள் இருக்க வேண்டும் என ஐ.சி.எம்.ஆர். வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இந்த டிரோன்களுக்கான பணிக்காலம் 90 நாட்களாக முதலில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தன. தற்போது டிரோன் ஆபரேட்டரின் திறமை மற்றும் திட்டத்துக்கான தேவைகளின் அடிப்படையில் இந்த பணிக்காலம் நீட்டிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News