ஆன்மிகம்
விஷ்ணு லட்சுமி

லட்சுமியின் அருளைத் தரும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதம்

Published On 2020-10-16 03:30 GMT   |   Update On 2020-10-16 03:30 GMT
புரட்டாசி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து மகாலட்சுமியை நினைத்து வழிபடுவதும் நன்மை பயக்கும் காரியமாகும்.
புண்ணியம் நிறைந்த மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. இந்த மாதத்தை வழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும், மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு ஏதுவான மாதமாகவும் பக்தர்கள் சொல்கிறார்கள். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது, பெரும்பேறு தரும் என்பார்கள். எனவே புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் ஒன்றையும் தவறவிடாமல் பெருமாளை வழிபட்டு வருவது சிறப்பானதாகும்.

அதேபோல், புரட்டாசி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து மகாலட்சுமியை நினைத்து வழிபடுவதும் நன்மை பயக்கும் காரியமாகும். இந்த நாளில் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து, லட்சுமி ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடுவதும் விசேஷமானது. நீண்டகால கடன் தொல்லையில் இருந்து விடுபட மகாலட்சுமி வழிபாடு வழிகாட்டும்.

புரட்டாசி வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபடுவதால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும், விரதம் இருந்து லட்சுமிதேவியை வழிபடுவதோடு, சில விஷயங்களையும் பின்பற்றினால் துன்பங்கள் விலகி லட்சுமியின் அருள்கடாட்சம் பரிபூரணமாக கிடைக்கும். மேலும் பணமும், தானியமும் குறையாத அருளைப் பெறலாம்.

வெள்ளிக்கிழமைகளில் லட்சுமிதேவிக்கு கற்பூர தீபாராதனைக் காட்டுவதோடு, வீடு முழுமைக்கும் தீபாராதனைக் காட்டுங்கள். இதை செய்வதன் மூலம், நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வருவது மட்டுமல்லாமல், வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கும்.

வெள்ளிக்கிழமைகளில் தேன் கலந்த பாயசம் படைத்து வணங்கி, குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இதன்மூலம் பணப் பஞ்சம் தீரும்.

வெள்ளிக்கிழமை மாலை வேளையில், லட்சுமி ஸ்தோத்திரத்தை ஓதுவது சிறந்தது. மந்திரத்தை படிக்கும்போது வீட்டின் கதவை திறந்து வைத்திருக்க வேண்டும். விஷ்ணு புராணத்தின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை லட்சுமி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய் வது மிகச்சிறந்த பலனை தரவல்லது.

வெள்ளிக்கிழமைகளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும். எறும்புகளுக்கு இனிப்பு பொருட்களை கொடுக்கலாம்.

வெள்ளிக்கிழமையன்று புளிப்பு சுவை கொண்ட பழங்கள், ஊறுகாய் போன்ற உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது. அதேசமயம் வெள்ளிக்கிழமை இனிப்பு சுவை கொண்ட பொருட்கள், பதார்த்தங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய நாள் ஆகும். மேலும், லட்சுமி தேவியை வணங்கும்போது புளிப்பு சுவை கொண்ட உணவை பிரசாதமாக படைக்கக்கூடாது.

வெள்ளிக்கிழமை அன்று மறந்தும் கூட யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாது. வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்ட பணம் திரும்ப வருவது கடினம் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வெள்ளிக்கிழமை அன்று கடன் கொடுப்பதால் உறவுகளிலும் கசப்பும், விரிசலும் ஏற்படக்கூடும்.
Tags:    

Similar News