செய்திகள்
தற்கொலை

ஈரோடு அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்து வியாபாரி தற்கொலை

Published On 2020-11-21 11:43 GMT   |   Update On 2020-11-21 11:43 GMT
ஈரோடு அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு சூரம்பட்டிவலசு காந்திஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). இவருடைய மனைவி கீதா (43). இவர்களுக்கு கீர்த்தனா (25), ஹேமா (23) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கணேசன் சூரம்பட்டி வலசு பகுதியில் காய்கறி கமிஷன் மண்டி வைத்து வியாபாரம் செய்து வந்தார். தொழில் சம்பந்தமாக இவர் சிலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கணேசனால் தான் வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியவில்லை. இதற்கிடையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதாக தெரிகிறது.

இதனால் மனம் உடைந்த கணேசன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று தனது காய்கறி கமிஷன் மண்டியில் விஷம் குடித்துவிட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கணேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கணேசனின் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் மகள்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News