ஆன்மிகம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலிய படுக்கை பூஜை இன்று நடக்கிறது
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலிய படுக்கை என்னும் மகா பூஜை இன்று இரவு நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இங்கு நடக்கும் முக்கிய விழாக்களில் வலிய படுக்கை என்ற மகா பூஜை சிறப்பு வாய்ந்ததாகும்.
மாசி பெருந்திருவிழாவின் 6-ம் நாள், பங்குனி மாத பரணி நட்சத்திரம் மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என ஆண்டுக்கு 3 முறை மட்டுமே இந்த பூஜை நடைபெறும்.
இதை தொடர்ந்து கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையான இன்று (வெள்ளிக்கிழமை) வலிய படுக்கை பூஜை நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, மதியம் 12 மணிக்கு உச்ச பூஜை, மாலை 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, வில்லிசை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் கோவில் வளாகத்திற்குள் பவனி வருதல், தொடர்ந்து வலிய படுக்கை என்னும் மகா பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் அம்மனுக்கு பல்வேறு உணவு பதார்த்தங்கள் மற்றும் பழ வகைகள் படைக்கப்படும்.
கடந்த பங்குனி பரணி நட்சத்திரத்தன்று கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் வலிய படுக்கை பூஜை பக்தர்கள் இன்றி நடந்தது குறிப்பிடத்தக்கது.