செய்திகள்
ஊட்டி பஸ் நிலையத்தில் தவற விட்ட ரூ.2¼ லட்சம் முதியவரிடம் ஒப்படைப்பு
ஊட்டி பஸ் நிலையத்தில் ரூ.2¼ லட்சத்தை தவறவிட்ட முதியவரிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு பை கிடந்தது. அதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அஜிதாகுமாரி என்ற பெண் போலீஸ் கண்டெடுத்தார். அதற்குள் பார்த்தபோது ரூ.2 லட்சத்து 27 ஆயிரம் இருந்தது. ஆனால் அதை தவறவிட்டு சென்றது யார் என்பது தெரியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஊட்டி அருகே சோலூரில் தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த நஞ்சன் (வயது 75) என்பவர் பணத்தை தவற விட்டு சென்றது தெரிய வந்தது.
இவர் தனது பேரனின் மருத்துவ செலவுக்காக வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்தை தனது நண்பர் உதவியுடன் எடுத்தார். அப்போது வீட்டிற்கு செல்ல பஸ்நிலையத்துக்கு வந்தபோது பணம் வைத்திருந்த பை தவறி கீழே விழுந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நஞ்சனை போலீஸ் நிலையம் வரவழைத்து, அவரிடம் பணத்தை திரும்ப ஒப்படைத்தனர்.