விளையாட்டு
கேஎல் ராகுல்

முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி- பேட்ஸ்மேன்கள் மீது கே.எல். ராகுல் பாய்ச்சல்

Published On 2022-01-20 06:33 GMT   |   Update On 2022-01-20 06:36 GMT
இந்திய அணியின் தற்காலிக கேப்டன் கே.எல். ராகுல் பேட்ஸ்மேன்கள் மீது அதிருப்தி அடைந்துள்ளார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் தோல்வி ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பார்ல்:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

பார்ல் நகரில் நடந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 296 ரன் குவித்தது.

கேப்டன் பவுமா, டூசன் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். பவுமா 110 ரன்னும், டூசன் 96 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 129 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர். பும்ரா 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன் எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷிகர்தவான் 79 ரன்னும், விராட் கோலி 51 ரன்னும், ‌ஷர்துல் தாகூர் 43 பந்தில் 50 ரன்னும் (5 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். நிகிடி, ‌ஷம்சி, பெகுல்வாயோ தலா 2 விக்கெட்டும், கேசவ் மகாராஜ், மார்க்ராம் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த தோல்வியால் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் லோகேஷ் ராகுல் பேட்ஸ்மேன்கள் மீது அதிருப்தி அடைந்துள்ளார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் தோல்வி ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். அது தொடர்பாக அவர் கூறியதாவது:-

எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. தவானும், விராட் கோலியும் நன்றாக பேட்டிங் செய்தனர். 20 முதல் 25 ஓவர்கள் வரை இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தோம்.

மிடில் ஓவர்களில் நாங்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து விட்டோம். மிடில் ஆர்டர் பேட்ஸ் மேன்களின் மோசமான ஆட்டத்தால் தோல்வி ஏற்பட்டது. மிடில் ஓவர்களில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் சிறப்பாக பந்துவீசி முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

மிடில் ஓவரில் ஒரு ஜோடியாவது நிலைத்து ஆடியிருக்க வேண்டும்.நாங்கள் எக்ஸ்ட்ரா மூலம் கிட்டத்தட்ட 20 ரன்கள் வரை கொடுத்துவிட்டோம். இது அதிகமானதே. நாங்கள் சில தவறுகள் செய்துவிட்டோம். வீரர்கள் அதிலிருந்து பாடம் கற்று இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகொண்ட ஒரு நாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் நாளை நடக்கிறது.

Tags:    

Similar News