உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கடையநல்லூரில் மருமகனை வெட்டிக்கொன்ற மாமனார்

Published On 2022-01-15 07:25 GMT   |   Update On 2022-01-15 07:25 GMT
கடையநல்லூரில் பொங்கலுக்கு வழங்கிய சீர்வரிசை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த மாமனார் அரிவாளால் மருமகனை வெட்டி படுகொலை செய்தார்.
கடையநல்லூர்:

புளியங்குடி அருகே டி.என். புதுக்குடியை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் சரத்குமார் (வயது 27).  இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

இவர் மேலக்கடையநல்லூரை சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் கற்பூர ஜோதியை காதலித்து திருமணம் செய்தார். சம்பவத்தன்று சரத்குமார்  மாமியார், தனது மகளுக்கு பொங்கல் படி கொண்டு சென்று கொடுத்தார்.

இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில், கணவர் சரத்குமாருக்கு பயந்து கற்பூர ஜோதி பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளார்.இதனை தெரியாத சரத்குமார், மாமியாருடன் தனது மனைவி சென்று விட்டதாக நினைத்து நேரடியாக மேலக்கடையநல்லூர் சென்று தகராறு செய்துள்ளார். 

தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த கண்ணன், தனது மருமகனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். இதுதொடர்பாக கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் சரத்குமார் எனது மகளை காதலித்து திருமணம் செய்தார். பொங்கல் சீர்வரிசை தொடர்பாக தகராறு எழுந்துள்ளது.

இதனால் மேலக்கடையநல்லூருக்கு வந்த சரத்குமார் எனது வீட்டின் முன்பு நின்று கொண்டு போதையில் தகராறு செய்தார். மேலும் அவதூறாகவும் பேசினார். 

நான் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவர் கேட்கவில்லை. இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த  நான் வீட்டில் இருந்த அரிவாளால் வெட்டிக்கொலை செய்தேன்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார். 

இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
Tags:    

Similar News