செய்திகள்
கோப்புப்படம்

சென்னை விமான நிலையத்தை சுற்றி வசிப்பவர்கள் பொருட்களை எரிக்காதீர்கள்- விமான நிலைய ஆணையம் வேண்டுகோள்

Published On 2021-01-10 02:15 GMT   |   Update On 2021-01-10 02:15 GMT
போகிப்பண்டிகையன்று புகை மூட்டம் உருவாகி சேவை பாதிக்கும் என்பதால் சென்னை விமான நிலையத்தை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் பொருட்களை எரிக்க வேண்டாம் என்று விமான நிலைய ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆலந்தூர்:

பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி, ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப போகி பண்டிகை அன்று பொதுமக்கள் வீட்டில் உள்ள உபயோகமற்ற கழிவு பொருட்களை எரித்து கொண்டாடுவர். இந்த நிலையில் விமான நிலைய ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை சுற்றி மீனம்பாக்கம், பல்லாவரம், பரங்கிமலை, ஆலந்தூர், நங்கநல்லூர், பொழிச்சலூர், பம்மல், கொளப்பாக்கம், மணப்பாக்கம் போன்ற பகுதிகள் உள்ளன. அதில், கடந்த 2018-ம் ஆண்டு விமான நிலையத்தை சுற்றி உள்ள மேற்கண்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் போகி பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி, அதிக புகை தரக்கூடிய பொருட்களை எரித்ததால் ஏற்பட்ட புகை மூட்டத்தினால் சென்னை விமான நிலையத்தில் 73 புறப்பாடு விமானங்களும், 45 வருகை விமானங்களும் தரையிறங்க சிரமம் ஏற்பட்டு சேவை பாதிக்கப்பட்டது.

அதே போல் கடந்த 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளிலும் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், வருகிற போகி பண்டிகையன்று விமான நிலையத்தை சுற்றி உள்ள வீடுகளில் அதிக புகை தரக்கூடிய பழைய கழிவு பொருட்களை (டயா், பிளாஸ்டிக்) எரிப்பதால் ஏற்படும் புகை மண்டலம் உருவாகி விமானநிலைய ஓடுபாதையை சூழ்ந்து கொள்ளும் நிலை ஏற்படும்.

இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் போகியன்று அதிகமாக புகை ஏற்படக்கூடிய கழிவு பொருட்களை எரிக்க வேண்டாம் என்றும், மேலும் விமான நிலையத்தை சுற்றி உள்ள குடியிருப்பு வாசிகள் விமான சேவைகள் பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பட ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
Tags:    

Similar News