செய்திகள்
பிரான்ஸ் நாட்டில் ராணுவ வீரர்கள் குவிப்பு

இரு மடங்காக குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினர் - பிரான்சில் பாதுகாப்பு அவசரநிலை பிரகடனம்

Published On 2020-10-29 16:26 GMT   |   Update On 2020-10-29 16:26 GMT
பிரான்ஸ் நாட்டில் பாதுகாப்பு பணியில் இரு மடங்கு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பாரிஸ்:

பிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோவில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேளிச்சித்திரத்தை மையமாக வைத்து அந்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.

அந்நாட்டின் நைஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் பயங்கரவாதி நடத்திய கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். 

அதேபோல், அந்த தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் அந்நாட்டின் அவிங்கான் மாகாணத்தில் துப்பாக்கியுடன் திரிந்து கொண்டிருந்த நபரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். ஒரே நாளில் நடைபெற்ற அடுத்தடுத்த 
பயங்கரவாத சம்பவங்களால் பிரான்ஸ் நாட்டில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், பயங்கரவாத சம்பவங்களை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் பாதுகாப்பு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வழிபாட்டுத்தளங்கள், பள்ளிக்கூடங்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு நலன்கருதி நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் இரு மடங்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

முன்னதாக 3 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 7 ஆயிரம் வீரர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அதிநவீன ஆயுதம் ஏந்தி பாதுகாப்பு படையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறனர். மேலும், அந்நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவாக குழுக்களை குறிவைத்து தீவிர தேடுதல் வேட்ட்டை நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்த இந்த சம்பவங்களால் பிரான்ஸ் முழுவதும் உச்சபட்ச பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News