செய்திகள்
ஆப்கானிஸ்தானில் குடியிருப்பு பகுதிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 7 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும், அரசுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தைகள் தோகாவில் நடைபெற்று வருகின்றன. எனினும், வன்முறை தாக்குதல்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடக்கும் மோதலில் தொடர்ந்து உயிர்ப்பலி ஏற்படுகிறது.
இந்நிலையில், வடகிழக்கு நகரமான குந்தூஸ் நகரில் குடியிருப்பு பகுதிகள் மீது பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளனர். டலோகா பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோர்ட்டார் ரக குண்டுகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
வன்முறையின் உச்சமான இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என ஆப்கானிஸ்தான் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து தலிபான் இயக்கம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.