செய்திகள்
திருவாரூரில் கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது
திருவாரூரில் கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் ரெயில்வே காலனியில் கனிமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை அர்ஜூனன் என்பவர் நிர்வகித்து வருகிறார். இவரது வீடு கோவிலுக்கு அருகாமையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு அர்ஜூனனுக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் கோவில் உண்டியலை ஒரு மர்ம நபர் உடைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து அவர் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு ஒரு மர்மநபர் உண்டியலை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது.
உடனடியாக அருகில் உள்ளவர்கள் உதவியுடன் மர்மநபரை பிடித்து திருவாரூர் நகர போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் புலிவலத்தை சேர்ந்த பார்த்திபன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாரத நேரு வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை கைது செய்தார்.