உள்ளூர் செய்திகள்
சூளகிரி அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி
சூளகிரி அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பலியானார்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி அருகே உள்ள ராம்புரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது45). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் முட்டைகோஸ் பயிர் செய்து வருகிறார். இவர் தோட்டத்தில் உள்ள பயிர்களை காட்டு பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் காட்டு பன்றிகள் வராமல் இருக்க மின்வேலி அமைத்து பாதுகாத்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை பக்கத்து தோட்டத்தை சேர்ந்த முனிராஜ் (வயது 38) என்பவர் மின்வேலி இருப்பது தெரியாமல் மின் வேலியில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த முனிராஜை ஒசூர் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.
வழியிலேயே முனிராஜ் பரிதாபமாக இறந்தார். உத்தனப்பள்ளி போலிசார், சம்பவ இடத்துக்கு சென்று முனிராஜ் உடலை ஒசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.