கோத்தகிரி அருகே பழங்குடியினர் கிராமத்தில் அண்ணன்- தம்பி கொலை
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ளது மெட்டுக்கல் மலை கிராமம். இது அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இங்கு 10 இருளர் குடும்பத்தினர் மட்டுமே வசித்து வருகிறார்கள்.
நேற்று இரவு இந்த பகுதியை சேர்ந்த அண்ணன்- தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி கடுமையாக தாக்கிக்கொண்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அண்ணன், தம்பி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொலை தொடர்பு மற்றும் போக்குவரத்து இல்லாத பகுதி என்பதால் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்க முடியவில்லை.
மலை கிராமத்தில் இருந்து இன்று காலை கீழ் இறங்கிய சிலர் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சிறுத்தை, புலி, யானை, கரடி உள்ளிட்ட கொடிய மிருகங்கள் வசிக்கும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் போலீசார் சம்பவ இடத்துக்கு செல்ல முடியவில்லை.
இது குறித்து அதிரடிப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிரடிப்படை வீரர்கள் கொடிய விலங்குகளை சமாளிக்க நவீன ஆயுதங்களுடள் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.
கோத்தகிரி போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மெட்டுக்கல் மலைகிராமத்தின் கீழ் காத்திருக்கிறார்கள்.
சம்பவ இடத்துக்கு சென்ற அதிரடிப்படை வீரர்கள் திரும்பிய பின்னரே கொலையானவர்கள் பெயர் விபரம் மற்றும் எதற்காக கொலை நடந்தது என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் கூறினர்.