செய்திகள்
அயோத்தி வழக்கு தீர்ப்பு: மும்பையில் 144 தடை உத்தரவு
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியதை அடுத்து மும்பை முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மும்பை:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று(சனிக்கிழமை) வெளியிட்டுள்ளது. இதை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பை முழுவதும் 144 தடை உத்தரவு இன்று அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி 5 அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒன்றாக கூட தடை செய்யப்பட்டு உள்ளது.
நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் கோவில் கட்ட அனுமதி அளித்துள்ளது. மேலும் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.