லைஃப்ஸ்டைல்
கோடை காலத்தில் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்?

கோடை காலத்தில் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்?

Published On 2021-04-21 06:29 GMT   |   Update On 2021-04-21 06:29 GMT
கோடை காலத்தில் வெறுமனே தண்ணீர் பருகுவது மட்டுமே தீர்வும் ஆகாது. உண்ணும் உணவுகள் நீர்ச்சத்து கொண்டதாகவும், திரவ வடிவிலான ஊட்டச்சத்து கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
கோடை காலத்தில் போதுமான அளவு தண்ணீர் பருகாமல் இருந்தால், உடல் சோர்வு, தலை வலி, சரும பிரச்சினை, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது போன்ற பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இதற்கு வெறுமனே தண்ணீர் பருகுவது மட்டுமே தீர்வும் ஆகாது. உண்ணும் உணவுகள் நீர்ச்சத்து கொண்டதாகவும், திரவ வடிவிலான ஊட்டச்சத்து கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

‘‘தினமும் 2 லிட்டர் தண்ணீர், கொழுப்பு அளவு குறைவாக கொண்ட பால் ( 300 மி.லி முதல் 400 மி.லி. ), 500 மி.லி. திரவ உணவுகள் போன்றவற்றை உட்கொள்வது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவும்’’ என்கிறார் பெங்களூருவை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் நினா மரியா.

வெப்பம் அதிகரிக்கும் காலகட்டத்தில் திரவத்தன்மை நிறைந்த உணவுகளை உண்பது அவசியம். பழங்களும், காய்கறிகளும் நீர்ச்சத்தை தக்கவைக்கக்கூடியவை. ஆரஞ்சு, முலாம், தர்பூசணி, வெள்ளரி, பச்சை இலைக் காய் கறிகள், பூசணி, சுரைக்காய் போன்றவை நீர்ச்சத்து அதிகம் கொண்டவை. பால் மற்றும் பால் பொருட்களும் நீர்ச்சத்து கொண்டவை.

கோடையில் உண்ணவேண்டிய நீர்ச்சத்து நிறைந்த உணவுகள்:

ஸ்கிம் பால்: இந்த பாலில் நீர்ச்சத்து அதிகம் இருக்கும். வைட்டமின் ஏ, பி12, பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், எலக்ட்ரோலைட் ஆகியவையும் நிறைந்திருக்கும். அதனால் இது ஊட்டச்சத்து மிக்கது. உடலை வறட்சியில் இருந்து காக்கும் தன்மை பாலுக்கு உண்டு. உடற்பயிற்சி செய்த பிறகு உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கு பால் அவசியமானது.

தர்பூசணி: கோடையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் தர்பூசணி முக்கியமானது. இதில் 92 சதவீதம் தண்ணீரும், வைட்டமின் ஏ, சி, மெக்னீசியம், நார்ச்சத்துகளும் நிறைந்துள்ளன. மேலும் இதில் கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடை அதிகரிக்காது. தர்பூசணியில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டு கள் செல்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கக்கூடியவை.

ஸ்ட்ராபெர்ரி: இது 91 சதவீதம் நீர்ச்சத்தை கொண்டிருக்கிறது. தொடர்ந்து இதனை சாப்பிட்டு வந்தால் அழற்சி பாதிப்பில் இருந்துவிடுபடலாம். இதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய்களில் இருந்தும் தற்காத்துக்கொள்ள உதவும்.

பீச் பழங்கள்: சீனாவை பூர்வீகமாக கொண்ட பீச் பழங்களும் நீர்ச்சத்து நிரம்பப் பெற்றவை. இவற்றுள் வைட்டமின் ஏ, பி மற்றும் சி மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுப்பொருட்களும் இருக்கின்றன. சருமப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் தரும் ஆற்றலும் இதற்கு உண்டு. கோடை காலத்துக்கு ஏற்ற பழமான இதில் கலோரியும் குறைவாகவே இருக்கிறது.

ஆரஞ்சு: இதில் நார்ச்சத்தும், பல்வேறு ஊட்டச்சத்துக்களும் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவல்லது. ஆரஞ்சு பழத்தில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் சி ஆகியவை இதயத்தின் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கக்கூடியது.

வெள்ளரிக்காய்: நீர்ச்சத்து நிறைந்திருக்கும் இது உடலுக்கு புத்துணர்ச்சியும் கொடுக்கக்கூடியது. ஒரு வெள்ளரிக்காயில் 8 கலோரிதான் இருக்கும். கோடையில் தவறாமல் உணவில் வெள்ளரிக்காய் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கீரை: 96 சதவீதம் நீர்ச்சத்து கொண்டவைகளாக கீரைகள் இருக்கின்றன. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நியூரல் டியூப் எனப்படும் குறைபாட்டை தடுக்கக்கூடிய போலேட் என்ற சத்தும் இதில் இருக்கிறது. மேலும் இதிலிருக்கும் வைட்டமின் ஏ, கே போன்ற சத்துகள் எலும்புகளை வலுப்படுத்தக்கூடியவை. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கக்கூடியவை.

சூப்: இவற்றில் 92 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் சூப் உடலுக்கு ஆரோக்கியமானது. சூப்களை தொடர்ந்து பருகி வந்தால் உடல் எடை குறையும். கோழி சூப் பருகுவதும் உடலில் நீர்ச்சத்தின் தேவையை பூர்த்தி செய்ய உதவும். கோடை காலத்தில் சூப் வகைகளை பருகலாம்.

தயிர்: உணவில் தயிர் சேர்த்துக் கொள்வது, உடல் ஆற்றலை மேம்படுத்த உதவும். இதில் இருக்கும் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவை ஆரோக்கியத்திற்கு ஏற்றவை. தயிர் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.

தக்காளி: இதில் 94 சதவீதம் நீர்ச்சத்தும், குறைந்த அளவிலான கலோரியும் இருப்பதால் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. தக்காளி நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் தன்மையும் கொண்டது. இது தவிர எலுமிச்சை சாறு, மோர், இளநீர், மில்க் ஷேக், கரும்புச்சாறு போன்றவற்றையும் கோடை காலத்தில் பருகி நீர்ச்சத்தை தக்கவைக்கலாம்.
Tags:    

Similar News