செய்திகள்
சித்ரா

சிவகிரி அருகே வீட்டில் அழுகிய நிலையில் பெண் பிணம்- கணவர் தலைமறைவு

Published On 2020-11-20 07:58 GMT   |   Update On 2020-11-20 07:58 GMT
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வீட்டில் அழுகிய நிலையில் இருந்த பெண் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி:

ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த தாண்டாம் பாளையம் மேற்கு வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி(வயது 46). இவரது மனைவி சித்ரா(35).

இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை, இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் தீபாவளி பண்டிக்கைக்காக சித்ரா கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பெரிய புளியம்பட்டியில் உள்ள தனது தாய் மல்லிகா வீட்டிற்கு சென்றார். ஆனால் பாலசுப்பிரமணி செல்லவில்லை.

கடந்த 15-ந் தேதி பாலசுப்பிரமணி மாமியார் வீட்டுக்கு சென்று சித்ராவை அழைத்து கொண்டு தாண்டாம்பாளையத்திற்கு வந்து விட்டார். பின்னர் சித்ரா தாய் மல்லிகாவுக்கு போன் செய்து இரவு முழுவதும் கணவர் தன்னிடம் சண்டை போட்டதாக கூறி போனை வைத்துவிட்டார்.

பின்னர் 16-ந் தேதி மாலை மல்லிகா மகள் சித்ராவுக்கு போன் செய்தார். அப்போது போனை பாலசுப்பிரமணி எடுத்து சித்ரா கோவிலுக்கு சென்றுள்ளார் என்று கூறி போனை வைத்துவிட்டார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் மல்லிகா மகளுக்கு போன் செய்தார். அப்போது போன் சுவிட்-ஆப் என வந்தது. பல முறை போன் செய்தும் சித்ரா போன் எடுக்காததால் சந்தேகம் அடைந்த மல்லிகா நேற்று இரவு உறவினர்களுடன் தாண்டாம்பாளையத்தில் உள்ள மகள் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டினால் பதில் இல்லை.

இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது சித்ரா அங்குள்ள அறையில் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து சிவகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சித்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சித்ரா எவ்வாறு இறந்தார் என தெரியவில்லை.

சித்ராவின் கணவர் பாலசுப்பிரமணி தலைமறைவாகி விட்டார். சித்ரா இறந்து 5 நாட்களாகி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சித்ரா தாய் மல்லிகா தனது மகள் சாவில் மருமகன் பாலசுப்பிரமணி மீது சந்தேகம் உள்ளதாக புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News