ஆவடி அருகே சேக்காடு ஏரியில் செத்து மிதந்த 7 டன் மீன்கள்
திருநின்றவூர்:
ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் பொது பணித்துறைக்கு சொந்தமான சுமார் 180 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. ஏரியை ரமேஷ், ராமதாஸ், சிகாமணி ஆகியோர் ஏலம் எடுத்து ரோகு, கட்லா, ஏரி வவ்வால், ஜிலேபி உள்ளிட்ட நாட்டு மீன்களை வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் குத்தகை தாரர்கள் ஏரிக்கு வந்து பார்த்தபோது ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆவடி மாநகராட்சி ஊழியர்கள் உடனடி ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் ஏரியில் செத்து மிதந்த சுமார் 7 டன் மீன்களை அகற்றினர். பின்னர் அந்த மீன்களை 10 அடி பள்ளம் தோண்டி புதைத்தனர்.
மேலும் எரியில் உள்ள மீதமுள்ள மீன்களும் தற்போது செத்து மிதந்து வருகிறது. இதனால் ஏரிப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எரியில் மீன்கள் திடீரென இறந்ததற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. ஏரியில் கழிவு நீரை கலந்ததால் மீன்கள் இறந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.