வழிபாடு
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெற குவிந்த உள்ளூர் பக்தர்கள்.

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெற குவிந்த உள்ளூர் பக்தர்கள்

Published On 2022-01-10 05:50 GMT   |   Update On 2022-01-10 05:50 GMT
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் வாங்க குவிந்த உள்ளூர் பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய வரிசையில் நின்று பெற்று சென்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. இதையொட்டி 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதற்காக ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் தினமும் 12 ஆயிரம் பக்தர்களும், ஆன்லைன் இலவச தரிசன டிக்கெட்டில் 10 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

திருப்பதியை சேர்ந்த உள்ளூர் பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக தரிசனம் செய்யும் வகையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் வீதம் 10 நாட்களுக்கு 50 ஆயிரம் பேரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் இரவு 10 மணி முதலே ராமச்சந்திர புஷ்கரணி, மாநகராட்சி அலுவலகம், பைராகி பட்டடி, விஷ்ணு நிவாசம் உள்ளிட்ட 5 டிக்கெட் கவுண்டர் முன்பாக பக்தர்கள் குவிய தொடங்கினர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் குவிந்தனர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் திணறினர்.

இதையடுத்து உடனடியாக டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டு இரவு 10 மணி அளவில் டிக்கெட்டுகளை வழங்கினர். பக்தர்கள் விடிய விடிய வரிசையில் நின்று டிக்கெட்டுகளை பெற்று சென்றனர்.

8 மணி நேரத்தில் 50 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகளும் காலியானது.

Tags:    

Similar News