உள்ளூர் செய்திகள்
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
குமரிக்கடல் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை:
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த 2 மாதமாக அதிகமாக மழை பெய்தது.
பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் பெரும் வெள்ள பாதிப்பும் ஏற்பட்டது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கடலோர மாவட்டங்களில் விட்டு விட்டு பலத்த மழை பெய்கிறது. சென்னையில் 2 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நகரமே வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
இப்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
நேற்று இரவு தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. கடலூர் மாவட்டத்திலும் கனமழை கொட்டியது. பேராவூரணியில் ஒரே நாளில் 22 செ.மீட்டர் அளவுக்கும் அதிராம்பட்டினத்தில் 16 செ.மீ. அளவுக்கும் மழை பெய்துள்ளது. இதனால் அங்கு தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
இந்த கனமழை இன்றும் தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-
தென் தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தேனி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
புதுச்சேரி உள்ளிட்ட மற்ற பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு .உள்ளது.
3-ந்தேதி தென் தமிழ்நாட்டிலும், அதிக மழை பெய்யும். குமரிக்கடல் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...தடுப்பூசி செலுத்தாதவர்கள் வெளிநாடு செல்ல தடை - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்