செய்திகள்
கொலை

ஓசூரில் இந்து மகா சபா செயலாளர் வெட்டி படுகொலை

Published On 2020-11-22 07:48 GMT   |   Update On 2020-11-22 07:48 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இந்து மகா சபா மாநில செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜ் (வயது 45). இவர் அகில பாரத இந்து மகா சபா மாநில செயலாளராக இருந்து வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வில்லங்கம் என்ற மாத இதழ் ஒன்றையும் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் நாகராஜ், அந்த பகுதியில் உள்ள அனுமந்த நகரில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பின்னால் காரில் வந்த 4,5 பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் திடீரென நாகராஜை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் நாகராஜை தாக்கினர். இதனால் சுதாரித்து கொண்ட நாகராஜ், அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓடினார். சுமார் 500 மீட்டர் வரை அவர் உயிர் தப்பிக்க தலைக்கெறிக்க ஓடினார்.

ஆனால் விடாமல் துரத்திய மர்ம கும்பல், நாகராஜை மடக்கி பிடித்து வெட்டினர். இதில் தலை, இடுப்பு, கை, கால்களில் பலத்த வெட்டுப்பட்ட நாகராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.

இதன்பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து அவர்கள் வந்த காரில் தப்பி சென்றனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகராஜ் வெட்டி கொலை செய்யப்படுவதை கண்ட சிலர், அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் போலீஸ் டி.எஸ்.பி.முரளி, இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலையுண்ட நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சிறிதுதூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

கொலை செய்யப்பட்ட நாகராஜிக்கு மஞ்சுளா (37) என்ற மனைவியும், ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு மட்டும் திருமணமாகி உள்ளது.

நாகராஜை வெட்டி கொன்ற மர்ம கும்பல் குறித்து ஓசூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் ரியல் எஸ்டேட் தொழிலில் பணம் கொடுக்கல் - வாங்கல் தொடர்பாக நாகராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ஓசூரில் இந்து மகா சபா மாநில செயலாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News