செய்திகள்
தற்கொலை

புதுக்கோட்டை அருகே 2 குழந்தைகளை கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை

Published On 2019-09-18 16:19 GMT   |   Update On 2019-09-18 16:19 GMT
புதுக்கோட்டை அருகே 2 குழந்தைகளை கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அன்னவாசல்:

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கோட்டைத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி ராஜலட்சுமி(வயது 26). இவர்களுக்கு நந்தினி(4), தாரணிஸ்ரீ(1) என 2 பெண் குழந்தைகள் இருந்தனர். மணிகண்டன் குடும்பத்தினரும், அவருடைய அண்ணன் குடும்பத்தினரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு மணிகண்டன் வெளியே சென்றிருந்தார். வீட்டில் குழந்தைகள் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது ராஜலட்சுமி குழந்தைகளை எழுப்பி, வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் அழைத்து சென்றார். இதையடுத்து ராஜலட்சுமியும், 2 குழந்தைகளும் உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் அலறினர். சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்து, ராஜலட்சுமி மற்றும் குழந்தைகளின் உடலில் எரிந்த தீயை அணைத்தனர்.

அப்போது ராஜலட்சுமியும், நந்தினியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இதையடுத்து உயிருக்கு போராடிய தாரணிஸ்ரீயை சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தாரணிஸ்ரீயும் பரிதாபமாக இறந்தாள்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இலுப்பூர் போலீசார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், ராஜலட்சுமி தன் மீதும், குழந்தைகள் மீதும் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டது தெரியவந்தது. அவர் குழந்தைகளை கொன்று, தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News