உள்ளூர் செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

தமிழக வாலிபர் உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டு வரப்பட்டது- ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை நிறைவேற்றம்

Published On 2022-01-24 05:12 GMT   |   Update On 2022-01-24 06:51 GMT
உயிரிழந்த சஷ்டிகுமாரை இழந்து வாடும், அவர்தம் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-


தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் ராசிங்கபுரம் நடுத்தெருவில் வசிக்கும் பாலசேகரனின் மகன் சஷ்டிகுமார் பாலசேகரன். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஏ.எம்.ஏ. மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப்படிப்பு பயிலச்சென்றவர் 15.1.2022 அன்று காலை 8 மணியளவில் அருவியில் குளிக்கச் சென்றபோது, சஷ்டிகுமார் நீரில் மூழ்கி இறந்து விட்டார்.

உயிரிழந்த அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர உரிய ஏற்பாடுகளைச் செய்திடுமாறு, முன்னாள் துணை முதல்-அமைச்சரும், தற்போதைய பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேற்படி கோரிக்கையினை ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறையுடன் ஒருங்கிணைந்து நிறைவேற்றிட உரிய நடவடிக்கைகளை எடுத்திடுமாறு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தானுக்கும், தி.மு.க. எம்.பி.தயாநிதி மாறனுக்கும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், உயிரிழந்த சஷ்டிகுமாரின் உடலைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரத் தேவையான அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நல ஆணையரகத்தின் மூலம், ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று (24-ந்தேதி) அதிகாலை 2.15 மணியளவில், சஷ்டிகுமார் உடல், பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து விமானத்தின் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு, அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேற்படி சஷ்டிகுமார் உடலைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர சிறப்பு நேர்வாக, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.4 லட்சம் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அவரது உடலை அவருடைய சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல, தமிழ்நாடு அரசின் கட்டண மில்லா அமரர் ஊர்தி வாகன சேவையும் ஏற்பாடு செய்து தரப்பட்டது.

இந்த நிலையில் இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த சஷ்டிகுமாரை இழந்து வாடும், அவர்தம் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News