செய்திகள்
கோப்புபடம்

அரசு சலுகையில் பாரபட்சம்-இந்து முன்னணி கண்டனம்

Published On 2021-07-12 08:29 GMT   |   Update On 2021-07-12 08:29 GMT
மதரீதியான பாரபட்சங்களை இந்த அரசு பின்பற்றுவது கண்டனத்திற்குரியது.
திருப்பூர்:

திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகங்களின் அறிவிப்புகள் தமிழகத்தில் மதரீதியான பிளவுகளை ஏற்படுத்தும் என்று இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘வக்பு’ வாரியத்தில் பதிவு செய்த பள்ளிவாசல், மதரசாக்களில் பணியாற்றுவோருக்கு 50 சதவீத மானியத்துடன் இரு சக்கர வாகனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த  கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், வயதான பெண்களுக்கு உதவும் வகையில் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்களின் இந்த அறிவிப்பும், பிற மாவட்டங்களில், இதேபோல் துவங்கியுள்ள நடவடிக்கைகளும் பாரபட்சமானது.

மதசார்பற்ற அரசு எனக்கூறும் அரசு இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தினருக்கு மட்டும் இந்த சலுகைகளை அறிவித்துள்ளது. மதரீதியான பாரபட்சங்களை இந்த அரசு பின்பற்றுவது கண்டனத்திற்குரியது. இது அனைத்து மதத்தினருக்கும் என்ற வகையில் அறிவிக்க வேண்டும். அல்லது இதை திரும்ப பெற வேண்டும். இது மதரீதியிலான பிளவு, பிரிவினைவாதம் ஏற்படுத்தும் செயல். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News