சுசீந்திரம் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலி
சுசீந்திரம்:
மாதவலாயத்தை சேர்ந்த மனஸ் என்பவரின் மகன் லோனி பாபு (வயது 24). இவர் நேற்று இரவு 7 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் மாதவலாயத்தில் இருந்து கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். வழுக்கம்பாறை சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த வேகத்தடையை அவர் கவனிக்கவில்லை.
இதனால் அதிவேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் வேகத்தடை மீது மோதியதால் லோனி பாபு தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.