உள்ளூர் செய்திகள்
ஆபாச படங்களை அனுப்பி மாணவிக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர் கைது
போலீசார் மாணவியை அழைத்து விசாரணை நடத்தியதுடன், ஆசிரியர் அசோக் மாணவியின் வாட்ஸ்-அப்புக்கு அனுப்பிய தகவல்களை ஆய்வு செய்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தளி கரட்டுமடம் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் 11-ம்வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் அப்பள்ளியில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர் அசோக் (வயது 36) என்பவர் அந்த மாணவியின் வாட்ஸ்-அப்புக்கு ஆபாச பதிவுகள் மற்றும் ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுபற்றி மாணவி பெற்றோர்-ஆசிரியர்களிடம் தெரிவிக்காமல் இருந்த நிலையில் ஆசிரியர் அசோக் தொடர்ந்து மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். இதுகுறித்து சிலர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் (சைல்டுலைன்) புகார் தெரிவித்தனர். உடனே அவர்கள் உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் மாணவியை அழைத்து விசாரணை நடத்தியதுடன், ஆசிரியர் அசோக் மாணவியின் வாட்ஸ் -அப்புக்கு அனுப்பிய தகவல்களை ஆய்வு செய்தனர். அப்போது அசோக் ஆபாச வார்த்தைகள் மற்றும் ஆபாச படங்களை அனுப்பியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அசோக்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோல் வேறு மாணவிகள் யாருக்காவது அசோக் பாலியல் தொல்லை கொடுத்தாரா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசாரணை முடிவில் இந்த சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக பள்ளி மாணவிக்கு ஆசிரியரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.