ஆன்மிகம்
மாசாணியம்மன் குண்டம் திருவிழா கொடியேற்றத்திற்கு 80 அடி நீள மூங்கில் கம்பை பக்தர்கள் எடுத்து வந்த காட்சி.

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2021-02-10 07:50 GMT   |   Update On 2021-02-10 07:50 GMT
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்காக சர்க்கார்பதியில் இருந்து 80 அடி நீள மூங்கில் கம்பம் வெட்டி எடுத்து வரப்பட்டது.
பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. ஆனைமலை உப்பாற்றங்கரையில் சயன நிலையில் இருந்து அருள்பாலித்து வரும் மாசாணியம்மனை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் உள்பட பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா தை அமாவாசை நாளில் கொடி யேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.

அதன்படி தை அமாவாசை நாளான நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் குண்டம் திருவிழா தொடங்குகிறது. அதை தொடர்ந்து 18 நாட்களுக்கு காலை மற்றும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது.

ஆனைமலை ஆழியாற்றங் கரையில் உள்ள மயானத்தில் வருகிற 24-ந்தேதி நள்ளிரவு 1 மணிக்கு மயான பூஜை நடக்கிறது. முன்னதாக இரவு 9 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 25-ந்தேதி காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகாபூஜை, 26-ந் தேதி காலை 10 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் நடைபெறுகிறது.

அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு சித்திரத்தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா ஆகியவை நடக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

மறுநாள் 27-ந்தேதி காலை 7.30 மணிக்கு விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். இந்த விழாவில் அமைச்சர்கள், துணை சபாநாயகர், மாவட்ட கலெக்டர், சப்-கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.

28-ந்தேதி காலை 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜையையும் நடக்கிறது. 1-ந்தேதி பகல் 11.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் கருணாநிதி, கண்காணிப்பாளர் அருண் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

முன்னதாக குண்டம் திருவிழாவையொட்டி கொடியேற்றுவதற்கு மூங்கில் கம்பம் வெட்டி எடுத்து வருவதற்கு ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நற்பணி மன்றத்தினர், தலைமை முறைதாரர், அம்மன் அருளாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் நேற்று மாலை சர்க்கார்பதியில் உள்ள அடர்ந்த காட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து சுமார் 80 அடி நீளமுள்ள மூங்கில் கம்பை வெட்டி எடுத்து வந்தனர்.

பின்னர் சர்க்கார்பதி மாரியம்மன் கோவில் வைத்து மூங்கில் கம்பத்துக்கு புடவை கட்டி, சந்தனம், குங்குமம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து செண்டை மேளம் முழங்க சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் நடந்தே பக்தர்கள் தோளில் வைத்து மூங்கில் கம்பத்தை கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
Tags:    

Similar News