ஆன்மிகம்
திருக்காட்கரை காட்கரையப்பன் கோவில்

வாமன அவதாரத்திற்குரிய திருத்தலம்: திருக்காட்கரை காட்கரையப்பன் கோவில்

Published On 2021-08-17 07:09 GMT   |   Update On 2021-08-17 07:09 GMT
மகாவிஷ்ணுவின் தசாவதாரம் என்று குறிப்பிடும் 10 அவதாரங்களில், வாமன அவதாரத்திற்குரிய தலமாக கேரள மக்களால் வழிபடப்படும் ஆலயம் இது.
கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகையின், வரலாற்றைச் சொல்லும் இடமாக ‘திருக்காட்கரை காட்கரையப்பன் கோவில்’ விளங்குகிறது. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. மகாவிஷ்ணுவின் தசாவதாரம் என்று குறிப்பிடும் 10 அவதாரங்களில், வாமன அவதாரத்திற்குரிய தலமாக கேரள மக்களால் வழிபடப்படும் ஆலயம் இது.

அசுர குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், கேரளநாட்டை ஆட்சி செய்து வந்த மகாபலி சக்கரவர்த்தி தன் மக்களின் மீது பற்றுகொண்டவனாக இருந்தான். இந்த மன்னனை, வாமன அவதாரம் எடுத்து வந்த பெருமாள், மூன்றடி மண் கேட்டு பாதாள உலகத்திற்குள் தள்ளிய இடத்தில் திருக்காட்கரை ஆலயம் அமைந்திருப்பதாக சிலர் சொல்கின்றனர்.

மகாபலி சக்கரவர்த்தி காலத்திற்குப் பின், கபில முனிவர் மகாவிஷ்ணுவின் வாமன தோற்றத்தைப் பார்க்க விரும்பினார். இதையடுத்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற, இறைவன் வாமன தோற்றத்தில் காட்சியளித்த இடமே இந்த ஆலயம் இருக்கும் பகுதி என்று வேறு சிலர் சொல்கிறார்கள். இந்தக் கோவிலில் கபில தீர்த்தம் உள்ளது. அந்த தீர்த்தத்தில் இருந்து எடுக்கப்படும் நீரைக்கொண்டே, இறைவனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

இந்த ஆலயத்தில் பெருமாள் வாமன அவதாரத் தோற்றத்தில் தெற்கு நோக்கி நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை தாங்கிய நான்கு கரங்களுடன் வீற்றிருக்கும் இத்தல இறைவன், ‘திருக்காட்கரையப்பன்’ என்று அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் ‘வாத்சல்யவல்லி’ என்பதாகும். இதற்கு ‘பெருஞ்செல்வ நாயகி’ என்று பொருள். இந்த ஆலயத்தில் பகவதி அம்மன், சாஸ்தா, கோபாலகிருஷ்ணன், பிரம்ம ராட்சசன், யட்சி ஆகியோருக்கு தனிச்சன்னிதிகள் அமைந்துள்ளன.

இந்த ஆலய இறைவனை போற்றி, நம்மாழ்வார் 10 பாசுரங்கள் பாடியிருக்கிறார். குழந்தைப்பேறு இல்லாதவர்கள், இக்கோவிலின் யட்சி மண்டபத்துக்கு முன்பு பொம்மைத் தொட்டில்களை வாங்கிக் கட்டி வழிபடுகிறார்கள். திருக்காட்கரையப்பனுக்கு நேந்திரம் வாழைப் பழங்கள் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. கோவில் பிரகாரத்தில் அரச மரம் ஒன்று உள்ளது. இதன் வேர் பகுதி பிரம்மா என்றும், நடுப்பகுதி விஷ்ணு என்றும், மேல் பகுதி சிவபெருமான் என்றும் சொல்கிறார்கள். இதனால் இந்த மரத்தை ‘முப்பெருங்கடவுள் மரம்’ என்கிறார்கள். மரத்தடியில் மேடை கட்டி, அதில் மாட விளக்கு ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. ஆயில்ய நட்சத்திர நாளில் இங்கு பூஜை செய்யப்படுகிறது. அவ்வேளையில், நாக இன பழங்குடி மக்கள் ‘புல்லுவன்’ என்ற பாடலை பாடுகிறார்கள்.

பழமையான சிவாலயம்

ஆலயத்தின் பின்புறம் ‘தெற்குக்கரை தேவர் கோவில்’ என்ற சிவாலயம் உள்ளது. இங்கு மகாபலி சக்கரவர்த்தி நிறுவி வழிபட்ட சிவலிங்கம் உள்ளது. திருக்காட்கரையப்பன் கோவிலைவிடவும், இந்த சிவாலயம் மிகவும் பழமைவாய்ந்தது. சிவன் கோவில் வளாகத்தில் பார்வதி, துர்க்கை, கணபதி, முருகன் ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. திருக்காட்கரையப்பன் கோவிலுக்கு வருபவர்கள், முதலில் சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்ட பின்னரே இங்கு வந்து வாமனரை வழிபடும் வழக்கம் இருக்கிறது. வாமனருக்கு பால்பாயசமும், சிவபெருமானுக்கு நெய் பாயசமும் படைக்கப்படுகிறது.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் திருக்காட்கரை என்ற இடத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. திருச்சூரில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்திலும், இரிஞ்சாலக்குடா என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திலும் இருக்கிறது, திருக்காட்கரை திருத்தலம்.

நேந்திரம் வாழை வரலாறு

திருக்காட்கரை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தில் வாழை பயிரிட்டிருந்தார். ஆனால் வாழை சரியான விளைச்சலை அளிக்கவில்லை. இதனால் வருத்தம் அடைந்த அந்த விவசாயி, திருக்காட்கரையப்பன் கோவிலுக்குச் சென்று, “இறைவா.. உன்னுடைய கண் பார்வை, வாழை பயிரிட்டுள்ள என் நிலத்தில் பட வேண்டும்” என்று மனமுருக வேண்டிக்கொண்டார். திருக்காட்கரையப்பனும், தன் பக்தன் நிலத்தைத் தன் கண்களால் பார்த்தார். இதனால் அவர் பயிரிட்ட வாழை பயிர் அதிக விளைச்சல் கண்டதுடன், அதில் விளைந்த வாழை, பெரிய அளவில் இருந்தது. இறைவனின் கண் பார்வையால் விளைந்த வாழை என்பதால் அதற்கு ‘நேத்திரம் வாழை’ என்று பெயர் வந்தது. கண்ணுக்கு ‘நேத்திரம்’ என்ற பெயர் உண்டு. இதுவே காலப்போக்கில் மருகி, ‘நேந்திரம் வாழை’ என்று ஆனது.

பிரம்ம ராட்சசன் சன்னிதி

திருக்காட்கரையப்பனுக்கு நேந்திரம் வாழையை படைப்பது வழக்கம். ஒரு விவசாயியின் நிலத்தில் விளைந்த நேந்திரம் வாழை, தங்கமாக இருந்தது. அந்த வாழையை கோவிலுக்கு அவர் காணிக்கையாக செலுத்தினார். ஒரு முறை ஆலயத்தில் இருந்த அந்த தங்க வாழை காணாமல் போனது. அந்தச் செய்தி, நாட்டு மன்னனுக்கு தெரிவிக்கப்பட்டது. மன்னன் சில காவலர்களை அனுப்பி விசாரிக்கச் சொன்னான். அவர்கள் கோவிலுக்கு வந்தபோது, அங்கே ஒரு யோகி தியானத்தில் இருந்தார். அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து மன்னன் முன்பாக நிறுத்தினர். மன்னனும் யோகியை, சிறையில் அடைக்க உத்தரவிட்டான்.

இதற்கிடையில் தங்க வாழை கிடைத்துவிட்டது. உடனடியாக யோகியை விடுதலை செய்ய மன்னன் உத்தரவிட்டான். இருப்பினும் செய்யாத தவறுக்காக தண்டனை பெற்ற யோகி, தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவர் பிரம்மராட்சசனாக மாறினார். பின்னர் மன்னனுக்கும், மற்றவர்களுக்கும் துன்பம் அளித்தார். மன்னன் தன் தவறுக்கு வருந்தி திருக்காட்கரையப்பனை சரணடைந்தான். பின்னர் கோவில் வளாகத்திலேயே யோகிக்கு ஒரு சன்னிதியை எழுப்பினான். பிரம்மராட்சசனாக இருந்த யோகிக்கு, அங்கு தினமும் வழிபாடு நடத்தி அவரது கோபத்தைத் தணித்தான். இந்த சன்னிதியை திருக்காட்கரையப்பன் கோவிலில் இன்றும் பார்க்கலாம். இதனை ‘பிரம்மராட்சசன் சன்னிதி’, ‘யோகி சன்னிதி’ என்றும் அழைக்கிறார்கள்.

Tags:    

Similar News