செய்திகள்
வாகன சோதனை

வேலூரில் டாக்டர், கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ.2¼ லட்சம் பறிமுதல்

Published On 2021-04-05 10:06 GMT   |   Update On 2021-04-05 10:06 GMT
வேலூரில் வாகன சோதனையில் டாக்டர், கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ.2¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்:

வேலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தலையொட்டி பணம், பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி வேலூர் சின்னஅல்லாபுரம் பகுதியில் நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் நித்யா தலைமையிலான குழுவினர் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 70 இருந்தது. அதையடுத்து அவற்றை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகே பறக்கும்படை அலுவலர் ஹேமலதா தலைமையிலான குழுவினர் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.96 ஆயிரம் இருந்தது. அந்த பணம் நிலை கண்காணிப்புக் குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்து 70, வேலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News