திண்டுக்கல்லில் செல்போன் கடையை உடைத்து பணம், பொருட்கள் கொள்ளை
திண்டுக்கல்:
திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே கலீல் அஹமது என்பவர் செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச் சென்றார். இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு சமயத்தில் இங்கு புகுந்த மர்ம நபர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
கடையில் இருந்த ரூ.8 ஆயிரம் பணம், 20 விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர் கொள்ளை சம்பவங்கள் அன்றாட நிகழ்வாகி விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் நாகல்நகரில் அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை முயற்சி நடந்தது. பாறைப்பட்டி ஏ.பி. நகரில் பர்னிச்சர் கடையை உடைத்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் நேற்று பொன்னகரத்தில் ஒரு மளிகை கடையில் கொள்ளை நடந்தது. ஆனால் இது வரை யாரும் சிக்கவில்லை. இந்த நிலையில் இன்று திண்டுக்கல்லில் மேலும் ஒரு கடையில் திருட்டு நடந்துள்ளது பொதுமக்களிடையே தொடர் பீதியை ஏற்படுத்தியுள்ளது.