உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் பைக் கவிழ்ந்து மெக்கானிக் உள்பட 2 பேர் பலி
கிருஷ்ணகிரியில் பைக் கவிழ்ந்து மெக்கானிக் உள்பட 2 பேர் பலியானார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த சின்னமேலுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன்(23). கிட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (37). நண்பர்களான இருவரும் டூவீலர் மெக்கானிக்குகள் ஆவர்.
இதில், லோகேஸ்வரன் பைக் ரேசில் பங்கேற்றும் வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் பைக்கில் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பால சர்வீஸ் ரோட்டிலுள்ள தர்கா அருகே தர்மபுரி தேசியநெடுஞ்சாலைக்கு சென்றபோது தாறுமாறாக ஓடிய பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். லோகேஸ்வரன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவரும் நேற்று உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.