செய்திகள்
தேர்வு நடத்துவதற்கான செலவினங்கள்: அண்ணா பல்கலைக்கழக அறிக்கை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி
தேர்வுகள் நடத்தப்படுவதற்கசான செலவினங்கள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்துள்ள அறிக்கை மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் கல்லூரி தேர்வுகள் எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தமிழக அரசு இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை தவிர்த்து மற்ற அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்தது. இதனால் மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற இருக்கின்றனர்.
இதற்கிடையே சென்னை அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகள் தேர்வுக் கட்டணத்தை வசூலித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது தேர்வுக்கான கட்டணம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழம் அறிக்கை தாக்கல் செய்தது. அப்போது ‘‘141 கோடி ரூபாய்க்கு மேல் தேர்வுக்கான செலவினங்கள் ஆகும் நிலையில், 118 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகிறது’’ என்று அண்ணா பல்கலைகழகம் தெரிவித்தது.
அண்ணா பல்லைக்கழகம் அளித்துள்ள அறிக்கை அதிருப்தி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், புதிய அறிக்கையை வரும் 24-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. அத்துடன், தேர்வுக்கட்டணத்தை வசூலித்து அனுப்பி வைக்காத கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
தேர்வுக்கட்டணத்திற்கு எதிரான வழக்குகளை வரும் 28-ந்தேதிக்கு கோர்ட் ஒத்திவைத்துள்ளது.