செய்திகள்
கோப்புபடம்

கழுத்தை நெரித்து பெயிண்டர் கொலை - கள்ளக்காதலனுடன் கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்

Published On 2021-09-11 10:26 GMT   |   Update On 2021-09-11 10:26 GMT
ஈரோடு அருகே பெயிண்டர் தினமும் மது குடித்து விட்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் கொன்றதாக பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஈரோடு:

ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்தவர் மதன் (வயது 29). பெயிண்டர். இவரது பெரியப்பா மகன் மகேஸ்வரன். இவரது மனைவி மஞ்சு (25). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மகேஸ்வரன் தனது குடும்பத்துடன் ஈரோடு சாஸ்திரி நகரில் வசித்து வந்தார். உறவினர் என்பதால் மதன் அண்ணன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். இதன் மூலம் மதனுக்கும் மஞ்சுவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடை வில் கள்ளக்காதலாக மாறியது. மகேஸ்வரன் வீட்டில் இல்லாதபோது மதனும், மஞ்சுவும் தனிமையில் இருந்து உள்ளனர்.

இவர்கள் கள்ளகாதல் விவகாரம் மகேஸ்வரனுக்கு தெரியவர மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மஞ்சு தனது கணவரை பிரிந்து ஈரோடு இரணியன் வீதியில் கடந்த 2 மாதமாக மதனுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மதன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மஞ்சுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மஞ்சு கயிற்றால் மதனை கழுத்தை நெரித்து உள்ளார். பின்னர் மதன் உறவினரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட மஞ்சு குடிபோதையில் வீட்டுக்கு வந்த மதன் மயங்கி விழுந்து மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதாகவும் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்குமாறு கூறி உள்ளார்.

இதையடுத்து மதன் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் மதன் கழுத்தில் காயங்கள் இருந்ததால் இது குறித்து தாலுகா போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மதன் உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் மஞ்சுவிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் மஞ்சு தனது கள்ளக்காதலன் ராஜாவுடன் சேர்ந்து மதனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

போலீசாரிடம் மஞ்சு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது கணவருடன் குடும்ப வாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருந்தபோது மதன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்தார். இதனால் மதனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. எனது கணவர் வீட்டில் இல்லாதபோது மதன் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார்.

எங்கள் விவகாரம் எனது கணவருக்கு தெரிந்து விட்டது. இதையடுத்து நான் என கணவரை பிரிந்து மதனுடன் தனியாக குடும்பம் நடத்தி வந்தேன். மதனுக்கு குடிப்பழக்கமும், கஞ்சா பழக்கமும் உள்ளது. இதையடுத்து அவர் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்தினார். மேலும் பாலியல் தொந்தரவும் கொடுப்பார்.

இந்நிலையில் மதனின் நண்பர் ராஜா என்பவர் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். ராஜா எனக்கு ஆறுதலாக இருந்தார். அதனால் அவருடனும் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த வி‌ஷயத்தை தெரிந்து கொண்ட மதன் கடந்த சில நாட்களாக குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்தினார்.இதுகுறித்து ராஜாவிடம் பேசி மதனை கொலை செய்ய முடிவு எடுத்தோம்.

இந்நிலையில் சம்பவத்தன்று மதன் வழக்கம்போல் மது போதையுடன் வீட்டுக்கு வந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாங்கள் 2 பேரும் சேர்ந்து மதன் கழுத்தை நெரித்து கொலை செய்தோம்.

இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.

இதைத்தொடர்ந்து தாலுகா போலீசார் மஞ்சு மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜாவை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மஞ்சு கோவையில் உள்ள பெண்கள் மத்திய சிறையிலும், ராஜா ஈரோடு கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர். 

Tags:    

Similar News