செய்திகள்
பெற்றோர் திட்டியதால் எலி மருந்தை தின்ற வாலிபர் தற்கொலை
வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மகனை பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த அவர் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
நாகப்பட்டினம்:
நாகை புதுத்தெரு, சால்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகதாஸ். இவருடைய மகன் சாமிநாதன் (வயது19). கூலி தொழிலாளி. சாமிநாதன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஏன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறாய் என்று பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சாமிநாதன் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து தின்று விட்டு தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சாமிநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் நாகை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.