ஆட்டோமொபைல்
வாகனங்களுக்கு வீட்டு வாசலில் சர்வீஸ் செய்து தரும் டிவிஎஸ்
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் வாகனங்களை அவர்களது வீட்டு வாசலில் சர்வீஸ் செய்து தரும் திட்டத்தை துவங்கி உள்ளது.
டிவிஎஸ் நிறுவனம் எக்ஸ்பெர்ட் ஆன் வீல்ஸ் எனும் திட்டத்தை அறிவித்து உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வாகனங்களை அவர்களது வீட்டு வாசலில் சர்வீஸ் செய்து வழங்க டிவிஎஸ் முடிவு செய்து இருக்கிறது.
புதிய எக்ஸ்பர்ட் ஆன் வீல்ஸ் திட்டம் நாடு முழுக்க சுமார் 300 விற்பனையகங்களில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள விற்பனையாளரை தொடர்பு கொண்டு சர்வீஸ் செய்ய நேரத்தை குறித்துக் கொள்ள முடியும்.
திட்டத்தை செயல்படுத்தும் விற்பனையாளர்கள் முழுமையான சானிடைசேஷன் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என டிவிஎஸ் அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் சர்வீஸ் செய்ய வாடிக்கையாளர்களை சந்திக்க செல்லும் பணியாளர்கள் பாதுகாப்பு உடை அணிந்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக டிவிஎஸ் தெரிவித்து இருக்கிறது.
கொரோனாவைரஸ் ஊரடங்கு காலக்கட்டத்தில் டிவிஎஸ் நிறுவனம் தனது சர்வீஸ் உதவி எண்கள் மற்றும் ரோடு சைடு அசிஸ்டண்ஸ் போன்ற சேவைகளை தொடர்ந்து அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கி வந்தது. மேலும் ஊரடங்கு காலக்கட்டத்தில் காலாவதியான இலவச சர்வீஸ், வாரண்டி மற்றும் ஏஎம்சி போன்ற சேவைகளின் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டது.