செய்திகள்
பித்தளை அகல் விளக்கு தயாரிக்கும் பணி

கார்த்திகை தீப திருநாளையொட்டி பித்தளை அகல் விளக்கு தயாரிக்கும் பணி மும்முரம்

Published On 2020-11-25 11:22 GMT   |   Update On 2020-11-25 11:22 GMT
கார்த்திகை தீபதிருநாளையொட்டி காரைக்குடி பகுதியில் பித்தளையால் செய்யப்படும் அகல்விளக்கு செய்யும் பணி மும்முரம் அடைந்து உள்ளது. இதையொட்டி வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு ஆர்டர்கள் வந்து குவிய தொடங்கி உள்ளது.
காரைக்குடி:

கார்த்திகை தீப திருநாள் என்பது இந்துக்களின் முக்கிய விழாவாக கருதப்பட்டு வருகிறது. அன்றைய தினம் வீடுகள் முழுவதும் பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபாடு செய்வது வழக்கம். இதேபோல் அன்றைய தினம் கோவில்களிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. கார்த்திகை தீப திருநாள் அன்று மண் விளக்கு மற்றும் பித்தளை விளக்குகளில் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்வார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 29-ந்தேதி அன்று கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காரைக்குடியை அடுத்த அரியக்குடி பகுதியில் செட்டிநாட்டு முறைப்படி பித்தளையால் ஆன அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தற்போது தீவிரமடைந்து உள்ளது.

பொதுவாக காரைக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை செட்டிநாடு என்று அழைப்பது வழக்கம். இந்த பகுதி கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றதோடு மட்டுமல்லாமல் உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றதாகும். அந்த வகையில் காரைக்குடி பகுதியில் தயாரிக்கப்படும் பித்தளை பொருட்களும் சிறப்பு வாய்ந்தது.

காரைக்குடியை அடுத்த அரியக்குடி பகுதி மக்கள் பித்தளை பொருட்கள் தயார் செய்யும் பணியை ஒரு குடிசை தொழிலாக மேற்கொண்டு வருகிறார்கள். பித்தளையில் சிறிய குத்துவிளக்கு முதல் பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. மேலும் அந்தந்த கால சீசனுக்கு ஏற்றவாறு இங்கு பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது கார்த்திகை தீப திருநாள் வர உள்ளதால் அகல் விளக்கு தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 

இதுகுறித்து அரியக்குடியைச் சேர்ந்த மாரிக்கண்ணு என்பவர் கூறியதாவது:-

இங்கு யானை விளக்கு, பாவை விளக்கு, கேரளா பகுதியில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஆமை வடிவ விளக்கு, ஓம் வடிவ விளக்கு, அன்னம் விளக்கு, குமுள் விளக்கு, 1, 4 மற்றும் 5 முக விளக்கு, அகல் விளக்கு, சர விளக்கு, லெட்சுமி விளக்கு, காமாட்சி விளக்கு, பிரதோஷ விளக்கு, கிளி விளக்கு, செடி விளக்கு, அஷ்ட விளக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர இந்த விளக்குகள் 5 இன்ஞ் முதல் 6 அடி வரை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த விளக்குகள் தமிழகத்தில் திருச்சி, மதுரை, சென்னை, கோவை, தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் ஆர்டர்கள் வந்து குவிகிறது. இதுதவிர மற்ற மாவட்டங்களில் இருந்து போன் மூலம் ஆர்டர்கள் கொடுப்பவர்களுக்கு பார்சல் மூலமும் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக கடந்த 5 மாத காலமாக முடங்கி கிடந்த இந்த பித்தளை பொருட்கள் தயாரிக்கும் பணி தற்போது கார்த்திகை விழாவிற்காக மீண்டும் புத்துயிர் பெற்று வேகமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News