செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க கோரி பெண் தீக்குளிக்க முயற்சி

Published On 2019-03-15 11:11 GMT   |   Update On 2019-03-15 11:11 GMT
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #pollachiissue

ஈரோடு:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் கல்லூரி மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த கயவர்களை கண்டித்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக சார்பில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் மூலம் நாளுக்கு நாள் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது,

ஈரோட்டிலும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் 300-க்கும் மேற்பட்டவர்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் மனுவை போட்டனர்.

பின்னர் அருகே உள்ள தபால் நிலையத்திற்கு சென்று இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தபால் அறிக்கை அனுப்பினர். ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் டவுன் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக மகளிர் இலக்கிய அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் வீரமணி என்ற பெண் திடீரென தன் பாட்டிலில் மறைத்துக் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக ஓடி வந்து அந்தப் பெண்ணிடமிருந்து மண்ணெண்ணை பாட்டிலை பறிமுதல் செய்தனர். அப்போது அவர் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக தூக்கில் இடவேண்டும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினார்.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீரை வீரமணி மீது ஊற்றினர். இதையடுத்து சூரம்பட்டி போலீசார் வீரமணியை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர் இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #pollachiissue

Tags:    

Similar News