ஆன்மிகம்
திருப்புல்லாணியில் புனரமைக்கப்பட்ட வெள்ளையன் சேர்வை சத்திரத்தின் தோற்றம்.

70 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளையன் சேர்வை சத்திரத்தில் எழுந்தருளும் ஆதிஜெகநாத பெருமாள்

Published On 2021-03-27 05:21 GMT   |   Update On 2021-03-27 05:21 GMT
ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் 70 ஆண்டுகளுக்கு பிறகு புனரமைக்கப்பட்ட வெள்ளையன் சேர்வை சத்திரத்தில் ஆதிஜெகநாத பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் பத்மாசனி தாயார் சமேத ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ராமாயணத்துடன் தொடர்புடைய இந்த கோவில் இந்தியாவில் அமைந்துள்ள 108 திவ்யதேசங்களில் 44-வது ஷேத்திரமாகும். பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் பங்குனி தேரோட்டம் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 20-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (28-ந் தேதி) தேரோட்டம் நடைபெறுகிறது. மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 8-ம் நாள் நிகழ்ச்சியாக அகமுடையார் சமுதாய மக்களால் வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வைக்கு புகழ் சேர்க்கும் வகையில் வெள்ளையன் சேர்வை மண்டகப்படி நடைபெறும்.

கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த திருவிழாவின் போது வெள்ளையன் சேர்வை சத்திரத்தில் உள்ள மண்டகப்படியில் ஆதிஜெகநாத பெருமாள் பத்மாசனி தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார். அதுசமயம் அன்னதானம் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளது. அதன் பின்னர் இந்த சத்திரம் முறையாக பராமரிக்கப்படாமல் சேதமடைந்ததை தொடர்ந்து பங்குனி தேரோட்ட விழாவின் போது பெயரளவிலேயே மண்டகப்படி நடைபெற்று வந்தது.

இதையறிந்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை சத்திரம் மீட்புக்குழுவினர் இந்த சேதமடைந்த சத்திரத்தை புனரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை சத்திரம் மீட்புக்குழு தலைவர் ரெத்தினக்குமார் தலைமையிலான இந்த குழுவினர் மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக அகமுடையார் சமுதாய மக்களின் நன்கொடையின் மூலம் தற்போது இந்த சத்திரம் ரூ.3 லட்சம் செலவில் முழுமையாக சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

கடந்த 70 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற உள்ள மண்டகப்படி பூஜையில் வெள்ளையன் சேர்வை சத்திரத்தில் ஆதிஜெகநாத பெருமாள் பத்மாசனி தாயாருடன் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை வெள்ளையன்சேர்வை சத்திரம் மீட்பு குழுவினர் செய்துள்ளனர். மேலும் அங்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தகரக்கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சிறுவர்களுக்கு அங்கு தினசரி சிலம்பம் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News