செய்திகள்
கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.325 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு- அமைச்சர் தகவல்
பாலக்கோடு அருகே உள்ள அ.மல்லாபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு கடனுதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே உள்ள அ.மல்லாபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு கடனுதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ் வரவேற்று பேசினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 25 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.15½ லட்சம் கடனுதவிகளையும், 126 விவசாயிகளுக்கு ரூ.98.62 லட்சம் மதிப்பிலான பயிர் கடன்களையும் வழங்கி பேசினார்.
அப்போது அமைச்சர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த 2019-2020-ம் ஆண்டிற்கு ரூ.260 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் இலக்கை தாண்டி 44,637 விவசாயிகளுக்கு ரூ.314.12 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டது. இதேபோன்று 2020-2021-ம் ஆண்டிற்கு ரூ.325 கோடி பயிர்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் கடந்த ஜூலை மாதம் வரை ரூ.39 கோடியே 66 லட்சம் பயிர்கடன் வழங்கப்பட்டு உள்ளது.
விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதை விவசாயிகள் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். விழாவில் பாலக்கோடு ஒன்றியக்குழு தலைவர் பாஞ்சாலை கோபால், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கவிதா சரவணன், தாசில்தார் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர்கள் முனியப்பன், செந்தில்குமார், முத்துராஜ், வீரமணி மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.