ஆன்மிகம்
நடராஜர், சிவகாமி அம்பாள் வெள்ளி மஞ்சத்தில் வீதி உலா

ஜம்புகேஸ்வரர் கோவிலில் நடராஜர், சிவகாமி அம்பாள் வெள்ளி மஞ்சத்தில் வீதி உலா

Published On 2019-07-10 04:59 GMT   |   Update On 2019-07-10 04:59 GMT
ஜம்புகேஸ்வரர் கோவிலில் திருவிழாவில் சுவாமி நடராஜர், சிவகாமி அம்பாள் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 4-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்தனர்.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ஆனி திருமஞ்சன விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அர்ச்சகர்கள் காவிரிஆற்றில் இருந்து வெள்ளி குடத்தில் புனிதநீர் எடுத்து அதை கோவில் யானை அகிலா மீது வைத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அந்த புனித நீரால் இரவு 7 மணிக்கு சுவாமி நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம், பூஜைகள் மற்றும் தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

விழாவின் 2-ம் நாளான நேற்று காலை சூரிய உதயத்திற்கு முன்பு ஆனந்த நடராஜர் தரிசனம் நடைபெற்றது. பின்னர் காலை 9 மணிக்கு சுவாமி நடராஜர், சிவகாமி அம்பாள் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 4-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்தனர். இதைத்தொடர்ந்து ஊடல் உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நடராஜரும், சிவகாமி அம்பாளும் ஒருசேர பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பகல் 12 மணிக்கு திருஅன்னப்பாவாடை நிகழ்ச்சியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News