உள்ளூர் செய்திகள்
பஞ்சாப் மாநிலத்தை ஆளும் காங்கிரசை கண்டித்து நெல்லை மாவட்ட பா.ஜனதாவினர் பாளை தபால் நிலையத்தில் இருந்து சோனியா காந்திக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்யவில்லை என்று பாரதிய ஜனதா கட்சி சார்பாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாகவும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இந்த நிலையில் இன்று நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் மகராஜன் தலைமையில், பாளை தபால் அலுவலகத்திற்கு சென்று சோனியா காந்திக்கு கண்டன கடிதம் அனுப்பும் போராட்டம் நடந்தது.
இதில் ஏராளமான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு, பஞ்சாப் சம்பவத்திற்கு காங்கிரஸ் அரசே காரணம் என்று கூறி, சோனியா காந்திக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் அனுப்பினார்கள்.
நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பாளையிலிருந்து மட்டும் கடிதம் அனுப்பினார்கள். இந்த சம்பவத்தை ஒட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.