செய்திகள்
கைது

தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பட்டதாரி வாலிபர்கள் கைது

Published On 2019-10-08 10:10 GMT   |   Update On 2019-10-08 10:10 GMT
பொள்ளாச்சி அருகே தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பட்டதாரி வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள், மோட்டார் சைக்கிள், 20 பவுன் நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் நா.மூ.சுங்கம் பகுதியில் கோட்டூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 3 பேர் இருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுந்தரபாண்டியன் என்கிற கார்த்தி(வயது 31), அவரது உறவினர் பாலசுந்தரம்(22), மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார்(22) என்பதும், இவர்கள் அனைவரும் பட்டதாரி வாலிபர்கள் என்பதும் தெரியவந்தது. இதில் சுந்தரபாண்டியன் தமிழகம் முழுவதும் பல்வேறு கொள்ளை, நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

இவர்கள் 3 பேர் மீது ஏற்கனவே பொள்ளாச்சி அடுத்த வீரல்பட்டி ஆவல் சின்னம்பாளையத்தில் குணசேகர் என்பவர் வீட்டில் நகை திருடியது உள்பட பல வழக்குகளில் தொடர்பு உள்ளதும் தெரிந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கார்கள், மோட்டார் சைக்கிள், 20 பவுன் நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News