செய்திகள்
உள்ளாட்சி தேர்தல் - தி.மு.க.வினர் 22 ந்தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இல.பத்மநாபன் அறிவிப்பு
கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில் மனுவை பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 22-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்கலாம்.
திருப்பூர்:
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினர் வருகிற 22-ந்தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல. பத்மநாபன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடைபெற உள்ள நகப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக, திருப்பூர் கிழக்கு, வடக்கு மாவட்ட கழகத்துக்கு உட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்ட கழகத்துக்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சியில் 10 வட்டங்களுக்கு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை 20-ந்தேதிகாலை 10 மணி முதல் 22-ந் தேதி மாலை 5 மணி வரை, திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில் மனுவை பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 22-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.