நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு: தி.மு.கவுடன் விரைவில் பேச்சு- திருமாவளவன்
சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான அனைத்து முன்ஏற்பாடுகளையும் தமிழக தேர்தல் ஆணையம் செய்து தயாராக உள்ளது.
தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்பதால் அரசியல் கட்சிகள் விருப்பமனுக்களை கட்சி தொண்டர்களிடம் பெற்று வருகிறது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-
தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தை இடம் பெற்று உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். விடுதலை சிறுத்தை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படவில்லை.
தி.மு.கவுடன் விரைவில் இடங்கள் ஒதுக்கீடு குறித்து பேசுவோம். விடுதலை சிறுத்தைக்கு வாய்ப்புள்ள இடங்களை தி.மு.கவிடம் கேட்டு பெறுவோம். தி.மு.கவிடம் இருந்து அழைப்பு வரும் போது நகர்ப்புற தேர்தலில் எந்தந்த இடங்களில் போட்டியிடுவது குறித்து பேசி முடிவு செய்வோம்.
சமூக வலைதளங்களில் பிரபாகரன் பற்றி அவதூறு பரப்புகிற கருத்தை அரசு கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.அரசியல் சாசனம் நேற்று கொண்டாடப்பட்டது.
அனைத்து ஜனநாயக அமைப்புகளும் அதிகாரத்தில் உள்ள சனாதன சக்திகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உறுதி ஏற்க வேண்டும். அவர்கள் மதரீதியாகவும் ஜாதிரீதியாகவும் மக்களை பிளவுபடுத்துகிறார்கள்.
2024-க்குள் அனைத்து சமூக நீதி அமைப்புகளும் இணைந்து அவர்களை வெளியேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... சென்னை விமான நிலையத்தில் சோதனையை கடுமையாக்க உத்தரவிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்