செய்திகள்
கொலை

சங்கரன்கோவில் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் வெட்டிக்கொலை

Published On 2021-08-12 05:17 GMT   |   Update On 2021-08-12 05:17 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக கணவன், மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளத்தை அடுத்த மலைபட்டியை சேர்ந்தவர் லட்சுமண துரை(வயது 35). இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இவரை பிரிந்து சென்று விட்டார்.

இதனால் லட்சுமண துரை சங்கரன்கோவிலில் வீடு எடுத்து தங்கி ராஜபாளையத்தில் உள்ள மில் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை மலைப்பட்டியில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் லட்சுமண துரை அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அந்த வழியாக வந்தவர்கள் இதனை பார்த்து குருவிகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக வடிவு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்தனர்.

அவர்கள் லட்சுமண துரையை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கள்ளக்காதல் விவகாரத்தில் லட்சுமண துரை வெட்டிக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

சுரண்டையை அடுத்த குலசேகரமங்கலத்தை சேர்ந்தவர் தெய்வானை. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்துவிட்டதால் தெய்வானை தனது சகோதரர் குமார்(36) உதவியுடன் மகள்களை படிக்க வைத்து வருகிறார். அவரும், லட்சுமணதுரை வேலை பார்க்கும் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் லட்சுமண துரை மற்றும் தெய்வானைக்கு மில்லில் வைத்து பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்த வி‌ஷயம் தெய்வானையின் தம்பி குமாருக்கு தெரிய வந்துள்ளது.

ஆத்திரமடைந்த அவர் கள்ளக்காதலை கைவிடுமாறு தெய்வானையை கண்டித்துள்ளார். மேலும் லட்சுமண துரையையும் எச்சரித்துள்ளனர். ஆனாலும் 2 பேரும் அடிக்கடி யாருக்கும் தெரியாமல் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

நேற்று காலை தெய்வானை திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மகள் தனது தாயார் மாயமானது குறித்து சேர்ந்த மரம் போலீசில் புகார் அளித்தார்.

இந்நிலையில் குமார் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி (33) ஆகியோர் விசாரித்து பார்த்த போது லட்சுமண துரையுடன், தெய்வானை சங்கரன்கோவில் பகுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையறிந்த குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

இதற்கிடையே லட்சுமண துரை தனது சொந்த கிராமமான மலைப்பட்டியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார். இதையறிந்த குமார் தனது மனைவியை அழைத்து கொண்டு அதே பகுதியை சேர்ந்த தேசிங்ராஜா (21) என்பவரது காரில் மலைப்பட்டிக்கு புறப்பட்டார்.

அங்கு லட்சுமண துரைக்கும், குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் லட்சுமண துரையை சரமாரியாக வெட்டினார்.

அவரை ராஜேஸ்வரி மற்றும் தேசிங்ராஜா ஆகியோர் தப்ப விடாமல் பிடித்து கொண்டனர். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குமார், அவரது மனைவி ராஜேஸ்வரி மற்றும் கார் டிரைவர் தேசிங்ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News