வழிபாடு
அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்பதை படத்தில் காணலாம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

Published On 2021-12-06 03:13 GMT   |   Update On 2021-12-06 03:13 GMT
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

இக்கோவிலில் கடந்த மாதம் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த மாதம் மழையின் காரணமாக தீபத் திருவிழாவின் போது சாமி தாிசனம் செய்ய வர முடியாத பக்தர்கள் தற்போது சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமானவர்கள் திருவண்ணாமலைக்கு வருகின்றனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் கொரோனா வைரசின் அடுத்த உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் வெளி நாடுகளில் பரவ தொடங்கி உள்ளது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தாிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் பலர் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

கொரோனா ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை குறைந்து காணப்படுகிறது. நாளுக்கு நாள் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் வலியுறுத்தி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News