செய்திகள்
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமக் இருப்பதை காணலாம்.

முக கவசம் அணியாமல் செல்வதால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Published On 2021-07-26 15:04 GMT   |   Update On 2021-07-26 15:04 GMT
முககவசம் அணியாமல் செல்வதால் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், நடவடிக்கை வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க அனைவரும் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு போலீசார், நகராட்சி, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் தற்போது திருவண்ணாமலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் தொழில் ரீதியாக பல்வேறு கிராமங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு தினமும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். அதுமட்டுமின்றி அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காகவும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் மக்கள் சமூக இடைவெளியில்லாமலும், முககவசம் அணியாமலும் பலர் சுற்றி திரிகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்பவர்கள், மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்களில் பலர் முககவசம் அணியாமல் செல்கின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

எனவே திருவண்ணாமலையில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க முககவசம் அணியாதவர்கள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் கண்காணிக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News